Monday, September 21, 2020

வெண்திரை வரிகளில் வாழ்வியல் நெறிகள்.

     சங்க இலக்கிய காலந்தொட்டே தமிழ் மொழியில் அறிவுரைகளுக்கும் அறநெறி செறிவூட்டலுக்கும் பஞ்சமே இல்லை. புறநானூறு,அவ்வையின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,வள்ளுவரின் திருக்குறள், போன்றவற் றால் தமிழ் மொழியில்,அறிவுரை நெறியியலால் களஞ்சியமும் நிரம்பி வழிகிறது. குறிப்பாக, அவ்வை யின் பொன்மொழிகளும், வள்ளுவரின் ஒவ்வொரு குறளும் செம்மொழிக்கு சிரசு மகுடங்களாக விளங்குகின்றன. இதன் தாக்கத்தின் விளைவாகவோ என்னவோ,கடந்த நூற்றாண்டின் காலப் பொக்கிஷங்களாகத் தோன்றும் தமிழ்த்திரைப்பாடல்களால், திரைக்கவிஞர்கள் சங்க இலக்கியத்தின் வழி நின்று,தமிழ் மொழிக்கு மேலும் பெருமை சேர்த்தனர் எனக் கூறலாம். 

  திரைப்படங்களை பொறுத்தவரை மூன்றெழுத்து இயக்கத்தை மூச்சாகக் கொண்டிருந்த,மூன்றெழுத்து நாயகர் எம்.ஜி.ஆர்,தனது திரைப்படங்கள் பலவற்றில்,அவ்வப்போது அறிவுரைப் பாடல்களைப் புகுத்திவந்தார்.இந்த மூன்றெழுத்து புரட்சி நடிகர் நடித்த,மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிய முதல் அறிவுரைப்  பாடல்,'மலைக்கள்ளன்' திரைப்படத்தில் டி.எம் சௌந்த ராஜன் குரலுயர்திப்பாடிய.

'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்று தொடங்கி, 

"தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்

கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்வோம்

கருத்தாக பல தொழில் பயிலுவோம் 

உரில் கஞ்சிக்கில்லை எனும் சொல்லினை போக்குவோம்......... 

ஆளுக்கொரு வீடு கட்டுவோம்

அதில் ஆன கலைகளை தீராது பயில்வோம் 

கேளிக்கையாகவே நாளினை போக்கிட 

கேள்வியும் ஞானமும் ஒன்றாக திரட்டுவோம்!" 

 எனும் முற்போக்குச் சிந்தனை போற்றும் அறிவுரைப் பாடலாகும். இச் சீரான  வரிகளை கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் தமிழ்திரையின் தர முயர்த்தும் கவிதை யாக்கினார்.     

    'நெறியியல்'என்றதும்,தமிழ் திரைப்படங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கென திட்டமிட்டு எழுதப்பட்ட பாடல் வரிகளே,நம் நினைவுக் கதவுகளை முதலில் தட்டும். 'நாடோடிமன்னன்' திரைப்படத்தில் "தூங்காதே தம்பி தூங்காதே"என்று தொடங்கி,'விழித்துக் கொண்டோ ரெல்லாம் பிழைத்துக் கொண்டார்;உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்' என்ற கருத்துக் செறிவான சிந்தனைகளை உள்ளடக் கிய,பட்டுக்கோட்டையார் பாடல்,இவ்வகையில் தனி முத்திரை பெற்ற  தாகும்.
    இதே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் 'திருடாதே' திரைப் படத்தில் "திருடாதே பாப்பா திருடாதே"என்று ஆரம்பித்து, "திருடராய்ப்பார்த்து திருந்தா விட்டால்,திருட்டை ஒழிக்க முடியாது"
என்று திட்ட வட்டமாக எழுதிவைத்தார். எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டையார் எழுதிய இன்னுமொரு கலங்கரை விளக்கமான பாடலே,'அரசிளங் குமரி' திரைப் படத்தில் கேட்ட,'சின்னப்பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்று ஆரம்பித்து,"ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி;
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு 
அதுவே நீதரும் மகிழ்ச்சிநாளும் ஒவ்வொரு பாடம் கூறும் 

காலம் தரும் பயிற்சி 

உன் நரம்போடுதான் பின்னிவளரணும் 

தன்மான உணர்ச்சி" என்றும் 

"தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா 

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" "எனும் பொன்னான வார்த்தைகளை உள்ளடக்கிய வரலாற்று வரிகளாகும்.
     எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து நாயகர்,சமூகத்தையும் மனித வாழ்க்கையையும் மேம்படுத்தும் கருத்துக்களை,தீப்பிழம்புகளின் வீரியத்துடன்,தனது திரைப்பட பாடல் வரிகளில் புகுத்துவதில்,கண்ணும் கருத்துமாய் இருந்தார்.அவ்வாறு அவருடைய சமூக அக்கரையில் எழுந்த பாடல் வரிகளே 'நம்நாடு' திரைப் படத்தில்,
"நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளை களே"என்றுதொடங்கி, "கிளிபோலபேசு; இளங்குயில்போல பாடு;மலர்போலச் சிரித்து நீ குரள்போல வாழு: மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்: 
மெய்யான அன்பே தெய்வீகமாகும்"
   என்று இணையற்ற சமூக இதிகாசம் படைத்த. இந்த வரிகளை வளமாய் வழங்கிய கவிஞர் வாலி,எம்.ஜி.ஆரின் பல திரைப்படப் பாடல்களுக்கு பலமானார்.இதேபோன்று பின்னர் 'பெற்றால் தான் பிள்ளையா' திரைப்படத் திற்கு எம் ஜி.ரு க்காக வாலி எழுதிய ஒப்பற்ற பாடலே,
"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி"
இந்த நாடே இருக்குது தம்பி "
என்பதாகும். இப்பாடலில் இடையே வரும் கீழ்க்காணும், 
"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
....................................................................................
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்"
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்" எனும் வரிகள் அமரத்துவம் பெற்றவையாகும். 
    எம்  ஜி ரைப்போல திரைப்படப் பாடல் கள்மூலம் தன்னம்பிக்கையை விதைத்த கதாநாயகர்கள் மிகக்குறைவே.
"உன்னை அறிந்தால் 
நீ உன்னை அறிந்தால் 
உலகத்தில் போராடலாம் 
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் 
தலை வணங்காமல் நீ வாழலாம் "[வேட்டைக்காரன் ]என்றும்,
"மனதுக்கும் மட்டும் பயந்துவிடு 
தன் மானத்தை உடலில் கலந்துவிடு 
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு 
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு" {பணத்தோட்டம் }
   என்றும்,எண்ணற்ற பாடல்கள் மூலம் அறநெறி போற்றி,மனதின் பலமே வாழ்வின் வெற்றிக்கு வழியாகும்,என்று உரக்க வலியுறுத்திக் கூறிய எம் ஜி ஆர் திரைப்படப் பாடல்கள் அனைத்துமே,காலம் வென்று சரித்திரம் படைத்த பாடல்களா கும்.மேற்காணும் இருபாடல்களுக்குமே கண்ண தாசன் வரிவடிக்க 'வேட்டைக் காரன்'திரைப் படத்திற்கு திரையிசைத் திலகமும் 'பணத்தோட்டம்'திரைப்படத்திற்கு மெல்லிசை மன்னர்களும் இசையமைத்தனர்.
    எம்.ஜி.ஆரைப்போலல்லாது,நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படங் களில் நெறியியலைக்காட்டிலும் தத்துவப் பாடல் கள் நிரம்பி வழிந்தன.இருப்பினும், சிவாஜி கணேசனின் ஒரு சில படங்களிலும்,   ஒற்றுமை,வாய்மை, தன்னம்பிக்கை, ஆகியவற்றை வலியுறுத்தும் பாடல்கள், கணிசமாக இடம் பெற்றிருந்தன.அப்படி நாம் கேட்ட சில பாடல்கள்தான், 'பாகப்பிரிவினை' திரைப்படத்தில் இடம் பெற்ற, 
"ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே;
 வேற்றுமையை வளர்ப்பதினாலே விளையும் தீமையே.
ன்பதும்,'அன்புக்கரங்கள்' திரைப்படத்தில் பேச்சு மொழி வரிகளாக இடம்பெற்ற,
"ஒண்ணா இருக்க கத்துக்கனும்
 இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்"ன்பதுமாகும்.
இதே ஒற்றுமையை முன்னிறுத்தி எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இடம்பெற்ற, 
"ஒருதாய் மக்கள் நாமென்போம்; 
ஒன்றே எங்கள் குமென்போம்"{'ஆனந்த ஜோதி' }மற்றும் 'பணக்கார குடும்பம்' திரைப்படத்தில் ஒலித்த, 
"ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே"போன்றவையாகும்.
வாழ்க்கையில் நம்பிக்கையின் அவசியத்தை 'பலே பாண்டியா' திரைப்படத்தில்  பரவசமூட்டிய 
"வாழ நினைத்தால் வாழலாம்; 
வழியா இல்லை பூமியில்", ன்ற அறிவுபுகட்டும் பாடல் வரிகளும்,பின்னர்'சாந்தி' திரைப்படத்தில் சந்தோஷ கனவுகள் படைத்த, 
"வாழ்ந்து பார்க்கவேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் 
வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்து பாட வேண்டும்" 
னும்  சபையேறும் வரிகளுமாகும். 
   மேற்காணும் பாடல்களில், "ஒற்றுமையாய் வாழ்வதாலே"வரிகளை ஏ.மருதகாசி எழுத,மற்ற அனைத்து பாடல்களும், கவியரசு கண்ணதாச னின் கற்பனையில் உதித்தவை என்பது அப்பாடல்களின் தனிச் சிறப்பாகும்.  
    வாய்மையின் வழித்தோன்றலை,சிவாஜி கணேசனின் அற்புத நடிப்பில் வெளியான 'ஆண்டவன் கட்டளை'திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன்"ஆறு மனமே ஆறு"எனும் பாடலில் ஆழ்ந்து அடர்ந்து, பின்வரும் வரிகளில் சத்திய சங்கமத்தின் புரிதலோடு, 
"உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
 உலகம் உன்னிடம் மயங்கும்; 
நிலை உயரும் போது பணிவு கொண்டால் 
உயிர்கள் உன்னை வணங்கும்;
உண்மை என்பது அன்பாகும்;
பெரும் பணிவு என்பது பண்பாகும்;
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் 
எல்லா நன்மையும் உண்டாகும்."
   என்று ஒப்பற்ற சொற்கோவையினால் வெளிப்படுத்தினார். 
  இதே சிந்தனையின் மற்றொரு வேடிக்கையான வெளிப்பாடே சிவாஜி கணேசனின்'படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில் முதல் காட்சியாக இடம்பெற்ற,
"ஓஹோஹோ மனிதர்களே 
ஓடுவதெங்கே சொல்லுங்கள் 
உண்மையை வாங்கி பொய்களை விற்று 
ருப்படவாருங்கள்"
என்று கேலிக்குரலுடன் தொடங்கி,தனது கற்பனைக் களஞ்சியத்தின் கவின்மிகுச் சொற்களால்,தொடர்ந்து பின்னி பெடலெடுத்த,
"அழுகிப்போனால் காய்கறிகூட சமையலுக்காகாது
அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது
ரித்துப்பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது
உளறித்திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது
காலம் போனால் திரும்புவதில்லை
காசுகள் உயிரை காப்பதும் இல்லை
அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிற்காது
அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது
விளம்பரத்தாலே உயர்த்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது
விளக்கிருந்தாலும் எண்ணையில்லாமல் வெளிச்சம் கிடைக்காது
திய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது
பழிப்பாதனாலே தெளிவுள்ள மனசு பாழ்பட்டு போகாது
பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது"
எனும்  வரிகளாகும்.  
   கவியரசின் கவிதைக் களப்பணி, தமிழ்திரையுலகம் காலமெல்லாம் கொண்டாடக் கூடிய திருவிழாக் கோலமே! 
   இதே கண்ணதாசன்தான் எம்.ஜி.ஆரின்'என் அண்ணன்' திரைப் படத்திற்கு நேர்மையையும், நம்பிக்கையும், பறைசாற்றும்வண்ணம்,
"நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு,ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா"
என்று பாட்டெழுதி,அதில், 
"உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து".
    என்ற நம்பிக்கை ஊற்றையும் நிறையச் செய்தார். 'என் அண்ணன்' திரைப் படத்தில் நெஞ்சைக்கவர்ந்த இன்னுமொரு பாடல் தான்''கடவுள் ஏன் கல்லானார்' என்று மனம் நொந்து, அதிலும் 
"நெஞ்சுக்கு  தேவை  மனசாட்சி  – அது
நீதி  தேவனின்  அரசாட்சி"  
  என்ற  ரமான வரிகளை உட்புகுத்தி வாய்மையை வேரூன்றச் செய்தது.  இக்கருத்தை மையமாக வைத்து சிவாஜி கணேசனின் 'சொர்க்கம்' திரைப் படத்திற்காக கண்ணதாசன் வடிவமைத்த வரிகள்தான்,
"சொல்லாதே யாரும் கேட்டால் 
எல்லோரும் தாங்க மாட்டார்"என்று தொடங்கி, 
"விதியென்று ஏது மில்லை 
வேதங்கள் வாழ்க்கையில்லை 
உடலுண்டு உள்ளம் உண்டு 
முன்னேறு மேலே மேலே"    
இவையனைத்துமே,கண்ணதாசனின் கவித்துவத்தை வெளிப்படுத்தும், காலத்தை வென் வரிகளே!
    அறிவார்ந்த சிந்தனையின் அவசியத் தையும்,ஆணவத்தின் அவலத் தையும் வெளிக்கொணர்ந்த மற்றுமொரு மறக்க முடியா எம்.ஜி.ஆர்  திரைப்பட பாடல்  வரிகளே'ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தில் வாலி எழுதி டி.எம்.எஸ் பாடிய, 
"ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை 
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை"
   எம்.ஜி.ஆரின் பல்வேறு பாடல்கள்,வாழ்க்கைப்பாதையின் வாசமிகு கலாச்சார மலர்களின் அங்கீகாரமாகத் திகழ்ந்தன.அப்படி நாம் உணர்ந்த பாடல்தான்,'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய 
"கண்போன போக்கிலே கால் போகலாமா? 
கால் போன போக்கிலே மனம் போகலாமா?"
    என்பதாகும். வாலி எழுதிய இப்பாடலின் இடையே தோன்றும்,
"பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம் 
புரியாத பலபேர்க்கு இது நாகரீகம் 
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் 
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்" என்றும்,மேலும் 

"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் 
வருந்தாத உள்ளங்கள் பிந்தென்ன லாபம் 
இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும் 
இவர்போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்" 
     போன்ற வரிகளால்,முறையான வாழ்க்கைப் பாதையின் வெள்ளோட் டத்தை, அனைவரும் வியக்கும் வண்ணம்  வாரித்தந்தன. 
    இப்பதிவில் உதாரணமாக குறிப்பிட்டுக் காட்டப்பட்ட பாடல் வரிகள் எல்லாம் தனிமனித,மற்றும் சமூக ஒழுக்கம் சார்ந்து,இப்படித்தான் வாழ வேண்டும் என்றோ, அல்லது இப்படி வாழ்வது முறையன்று  என்றோ, எடுத்துரைக்கப்பட்ட வாழ்வியல் நெறிகளேயன்றி,தத்துவ கோட் பாடுகள் அன்று.சிந்தனை மேம்பட்டு, செயல்பாடுகள் சிறப்புற்றால் மட்டுமே மனிதம் தழைக்கும் என்பதை,எவ்வளவு உயரிய பாடல்களாக, தமிழ்த் திரை உலகம் நமக்கு விலைமதிப்பில்லா பொக்கிஷமாகத் தந்திருக்கிறது.
   இவை எல்லாவற்றிக்கும் மேலாக, இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பல பாடல்களையும்,எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் எனும் தமிழ்த் திரையுலகில் இரு மாறுபட்ட திரைப் பாதை அமைத்துக் கொண்ட ஒப்பிலாக் கதாநாயகர் களுக் காக,அவர்களின் பின்னனிக் குரலாகவே வாழ்ந்த டி.எம்.சௌந்த ராஜன் பாடினார் என்பது தமிழ் மண்ணை என்றென்றும் மணக்கச் செய் யும் மகத் தான குறியீடாகும். மக்கள் திலகத்திற்கும் நடிகர் திலகத்திற் கும்,மாறி மாறி குரல்கொடுத்து தன் ஆயுளை தமிழ்திரையிசைக்கு அர்ப்பணித் தார்,பாட்டுக் கொரு தலைவனாக விளங்கிய டி.எம்.எஸ்..

  எனவே தமிழ்திரையின் நெறியியல் பாடல்கள் பலவற்றிற்கும் குரலால் குணம் சேர்த்தவர் ஒற்றைப்பாடகர் டி.எம்.சௌந்தராஜன் ஆவார்.இவரே இரண்டு மாபெரும் நடிகர்களின் பாடல் பொழிவின் வெள்ளமானர்;வேகமானர்; விவேகமானர். 

  இவர்கள் இருவரிடம் இருந்து சற்றே விலகி, 'விளக்கேற்றியவள்'{1965}திரைப் படத் தில் டி.ஆர்.பாப்பாவின்  இசையில் டி.எம்.எஸ். பாடிய  அறிவுரை பாடலே, 

"கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு 

கண்ணியம் தவறாதே அதிலே திறமையைக் காட்டு .......

ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது அறிவுக்கு வேலை கொடு 

உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும் அன்புக்கு பாதை விடு ............

மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோயிலப்பா

இதை மறந்தவன் வாழ்வு தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா" 

எனும் ஆலங்குடி சோமுவுவின் அறிவார்ந்த வரிகள்.    

   கடந்த நூற்றாண்டின் கலாச்சார மற்றும் மனிதவள பாதையில்,தொழில் நுட்பத் துறையின் அசுரவேக வளர்ச்சி வழி மறிக்க,தமிழ்த்திரை படைப்பாளிகள்   நெறியியல் பாடல்களை கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளி,  இன்றைய காலகட்டத்தின் நடைமுறை தேவைகளை அனுசரித்து,கதைக்க களத்தையும்,இசை பரிமாணங்களையும் வித்தியாசமாக புகுத் திக்கொண் டிருக்கின்றனர்.இருப்பினும்,கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி யில் பிறந்து,தமிழ் மொழியையும் தமிழ்த் திரையையும் உணர்வுபூர்வமாக நேசித்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு,"பழமை பெருசுடா பேராண்டி பழமை பெருசுடா"என்று நெஞ்சு நிமிர்த்தி பழமையின் உன்னதத்தை சற்றே இறுமாப்புடன் சொல்லிக்கொண்டே இருக்கலாமே, என்று தோன்றுகிறது. அதில் தப்பேதும் இல்லையே!

 ப.சந்திரசேகரன் . 
                                      ==================================

No comments:

Post a Comment