Monday, September 22, 2025

பூவை செங்குட்டுவனின் கவிதை பூக்கள்


 

  காதலும்,கருத்தாழத் தத்துவமும், வாழ்க்கை கொண்டாட்டமுமே, திரை யிசைப் பாடல்களின் தலையாய கருத்து மேடைகளாக களைகட்டிய காலத்தில் சற்றே மாறுபட்டு,பெரும்பாலும் இறை நெறி சார்ந்த திரைப்பாடல்களை திகட் டாமல் தமிழ்த்திரையில் தொடர்ந்து வழங்கிய சிறந்த கவிஞர் பூவை செங்குட்டுவன், இன்று நம்மிடையே இல்லை. 

  ஏ.பி.நாகராஜனின்'மேல் நாட்டு மருமகள்'திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதத்தொடங்கி அதற்குப்பின் பல் வேறு பாடல்களை எழுதி, பின்னர் 'கனி முத்து பாப்பா' திரைப்படத்திலும் அனைத்து பாடல் களையும் புனைந்திருந்தார்.

  'மேல்நாட்டு மருமகள்'திரைப்படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடிய, 

"முத்தமிழில் பாடவந்தேன் 

முருகனையே வணங்கி நின்றேன் 

தித்திக்கும் குமரன் பெயரில் 

தெய்வீக அழகைக் கண்டேன்" 

எனும் பாடலும், வாணி ஜெயராமும் T.K. கலாவும் பாடிய,

"பல்லாண்டு பல்லாண்டு வாழியவே" 

  எனும் பாடலும், தனித்துவம் பெற்றிருந் தன. அதே திரைப்படத்தில் எஸ்.பி.பால சுப்ரமணியமும் வாணி ஜெயராம் பாடிய, "How wonderful,how beautiful" மற்றும் உஷா உதுப் பாடிய 'Love is beautiful"  என்று ஆங்கிலத்தில் தொடங்கும் வித்தியாசமான பாடல்களையும் பூவை செங்குட்டுவன் எழுதி அசத்தியிருந்தார். 'கனிமுத்துபாப்பா'வில் T. V. ராஜுவின் இசையில் அவர் எழுதியிருந்த ஐந்து பாடல்களில், 

P. சுசீலா பாடிய, 

"ராதையின் நெஞ்சமே 

கண்ணனுக்கு சொந்தமே"&

"ஏழு மலைவாசா 

எமையாலும் ஸ்ரீநிவாஸா 

எந்நாளும் துணை நீயே 

ஸ்ரீ வெங்கடேசா" 

  ஆகிய இரு பாடல்களும் நெஞ்சுக்குள் தெய்வீக மனதுடன் ரீங்காரமிட்டன.

  அவரின் திரையிசை பக்திப்பாடல்களில், 'கௌரி கல்யாணம் திரைப்படத்தில் சூலமங்கலம் ராஜலட்சுமியும் P. சுசீலாவும் இணைந்து பாடிய,

"திருப்புகழை பாடப்பட வாய் மணக்கும்" 

   மற்றும் 'கந்தன் கருணை' திரைப்படத் தில் அதே பாடகர்கள் இருவரும் மீண்டும் இணைந்து இனிக்க இனிக்க பாடிய, 

"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் 

திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்"

 பாடலும்,'திருமலை தென்குமரி'படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய,

"குருவாயூரப்பா 

திருவருள் தருவாய் நீயப்பா 

உன்கோவில் வாசலிலே 

தினமும் திருநாள் தானப்பா"

  போன்ற அனைத்து பாடல்களுமே,என் றென்றும் நினைவுகளில் தேனூறும் கீதங்களாகும்.  

 'வா ராஜா வா' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலுயர்த்திப் பாடிய, 

"இறைவன் படைத்த உலகை எல்லாம் 

மனிதன் ஆளுகின்றான் 

மனிதன் வடித்த சிலையில் எல்லாம் 

இறைவன் வாழுகின்றான்"

மற்றும் 'அகத்தியர்' திரைப்படத்தில் T.K.கலா பாடிய,

"தாயிற் சிறந்த கோவிலும் இல்லை 

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை 

ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை 

அன்னை தந்தையே அன்பின் எல்லை"

  போன்ற பாடல்கள்,கடவுளையும் மனித னையும் ஒருங்கிணைத்து,வாழ்வியல் தத்துவத்தில் ஒளிபெறச்செய்தன. 

  'ராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜனும்,எஸ் வரலட்சு மியும் சேர்ந்து உச்சக்குரலால் ஊர்க்கூட்டி தேரிழுத்த, 

"ஏடு தந்தானடி தில்லையிலே

அதை பாடவந்தேன் 

அவன் எல்லையிலே"

  என்று,இருகுரல்கள் ஒரே குரலாய் ஒலித்த பாடலும்,பூவை செங்குட்டு வனின் புகழ் பரப்பின.

இவற்றைக்கடந்து 'கௌரி கல்யாணம்' திரைப்படத்தில் T.M.S& P.சுசீலா பாடிய,

"வரணும் வரணும் மகாராணி 

வஞ்சியர் சங்கமம் இதே இடம் 

சரணம் சரணம் சன்னிதானம் 

சண்டை  முடிந்தது சமாதானம்"

'பெத்த மனம் திரைப்படத்தில்' டி. எம் எஸ்ஸும் P.சுசீலாவும் பாடிய,

"காலம் நமக்கு தோழன் 

காற்றும் மழையும் நண்பன்" 

'புதிய பூமி' திரைப்படத்தில் டி. எம்.எஸ் பாடிய 

"நான் உங்கள் வீட்டு பிள்ளை 

இது ஊர் அறிந்த உண்மை 

நான் செல்லுகின்ற பாதை 

பேரறிஞர் காட்டும் பாதை"

  போன்ற எல்லா பாடல்களுமே,தமிழ்த் திரையிசை வரலாற்றில் சாகா வரம் பெற்ற பாடல்களாகும். 

  தமிழ்திரையிசை கவிஞர்களில்,பூவை செங்குட்டுவன்'என் வழி தனி வழி'என்று, ஆயுள் அகம் மகிழ நிறைவுடன் பெற்று  இன்று நம்மை விட்டு மறைந்தாலும், என்றென்றும் தமிழ்திரையின் தன்னிக ரில்லா புலமையின் அடையாளமாய் முத்திரை பதித்து,காலம் வென்று மணக்கும் மலராய் திகழ்வார் என்பது, திண்ண மாகும். 

          ============0============


2 comments: